சர்வதேச நாடுகளுக்கு இலங்கை நல்லதொரு முன்னுதாரண நாடாக மாறியுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“இன்று மேற்கத்தேய நாடுகள் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை உணர ஆரம்பித்துள்ளன. நாம் கடந்த முப்பது ஆண்டுகளில் எதிர்கொண்ட அனுபவங்கள், எமது மக்கள் அனைவரும் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் அவர்களும் உணர ஆரம்பித்துள்ளனர். சர்வதேச தரப்பில் இந்த உண்மைகளை நாம் வெளிப்படுத்தி வருகின்றோம்.
கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் பயங்கரவாத தடுப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற இரண்டு விடயத்தின் சமநிலைத்தன்மையும் உருவாக்கப்படும்.
நாட்டின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கிடைக்கவுள்ளமைக்கும் எந்தவித தொடர்புகளும் இல்ல. எனினும் நல்லிணக்கத்தை பலப்படுதுவன் மூலம் ஜி. எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் வழிமுறை மேலும் உறுதிப்படுத்தப்படும்” என கூறினார்.