ராஜஸ்தான் மாநில அரசு மாநில பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு, அதன்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாநில அரசின் இந்த செயல்பாட்டிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாத், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த செயலை மாநில அரசு செய்துள்ளதாகவும், இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.