வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தாவினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்து விட்டிருப்பதாக எமது கட்சி தீர்மானித்துள்ளது. பா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதற்கு கட்சி மேலும் தீர்மானித்துள்ளது. டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் அறியத்தருவோம்” – என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு அன்றைய தினமே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “உங்கள் கடிதம் கிடைத்தது. அதன் உள்ளடக்கங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. ஏற்கனவே அமைச்சர் பா.டெனீஸ்வரன் எமது விசாரணைக்குழு முன் தான் தெரிபடமாட்டார் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தேன். எனவே, உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவன என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்” – என்றுள்ளது.
பின்னணி
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையில், விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த த.குருகுலராசா ஆகியோரைப் பதவி நீக்கப் பரிந்துரைத்திருந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவர்கள் இருவரைப் பதவி நீங்குமாறு கோரியிருந்ததுடன், ஏனைய இரு அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோரை கட்டாய ஒரு மாத விடுப்பில் செல்லுமாறும் அவர்கள் மீது மற்றொரு விசாரணை நடக்கும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் பெரும் சர்சை ஏற்பட்டிருந்தது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம், வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. கட்டாய விடுப்பில் செல்லுமாறு கோரியதை, முதலமைச்சர் மீளப் பெற்றதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானமும் முன்கொண்டு செல்வது நிறுத்தப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விசாரணைக்குழு ஒன்றை தான் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் இந்த விசாரணைக் குழு முன் தோன்ற மாட்டோம் என்றும், சட்டரீதியான – சுயாதீனமான – மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழு முன் தோன்றுவோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேரடிப் பேச்சு நடைபெற்ற பின்னரே மற்றொரு விசாரணை தொடர்பான விடயங்கள் ஆராயப்படும் என்று கிடப்பில் போடப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு நிலையிலேயே மேற்படி முடிவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.