வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடையாளங்கண்டு பட்டதாரிகளை நியமனம் செய்யுமாறு வடமாகாண ஆளுநருக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபை பேரவை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதன்போது பட்டதாரிகள் கடந்த 39 நாட்களாக தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், மாகாண சபை என்ன நடவடிக்கை எடுத்தது என மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி சபையில் பேசபட்டதற்கு இணங்க கடந்த 18 ஆம் திகதி ஆளுநருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு 180 இடங்கள், சுகாதார அமைச்சில் 22 இடங்கள், முதலமைச்சர் அமைச்சில் 15 இடங்கள், கல்வி அமைச்சில் ஆயிரத்து 51 இடங்கள் வெற்றிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக ஆயிரத்து 252 வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவை தொடர்பாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண அவைத் தலைவர் சீ.வி. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.