ஸ்ரீலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்மின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் ஓரங்கமாக புலம்பெயர் சமூகத்தினரின் முதலீடுகளை கவரும் வகையில் சட்டமூலங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டினார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பு – பொறளையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, “இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பக்கம் இருந்த எரிக் சொல்ஹெய்ம் என்ற பிரபலமான ஒருவர் இந்தியாவில் வெளியாகும் தி ஹிந்து பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்த பேட்டியில், ஸ்ரீலங்காவில் சிறந்த முதலீட்டாளர் சீனா அல்ல, புலம் பெயர் சமூகமே சிறந்த முதலீட்டாளர்கள், விடுதலைப் புலிகளின் புலம்பெயர் சமூகத்திடம் பாரிய நிதி காணப்படுகிறது. வியாபார திறமை, தொழில்நுட்பம் உள்ளது. அதனால் குறித்த சமூகத்தினரின் முதலீடுகளை நாட்டிற்குள் வரச்செய்து வித்தியாசமான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமென எரிக் சொல்ஹெய்ம் மிகத்தெளிவாக ஹிந்து பத்திரிகைக்குக் கூறியிருந்தார்.
எரிக் சொல்ஹெய்மின் எதிர்பார்ப்புக்களே உத்தேச அந்நிய செலாவணி தொடர்பான ஏற்பாடுகள் சட்டமூலத்தின் ஊடாக கொண்டுவரப்படவுள்ளன. விடுதலைப் புலிகள் போராட்டத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட நிதி மத்திய வங்கியின் தலையீட்டின்றி நாட்டிற்குள் கொண்டுவர முடியுமானால் பொருளாதார கேந்திரமாக மாறும். மிக நீண்ட நாட்களாக பங்குச்சந்தை வீழ்ந்திருந்த நிலையில் அந்நிய செலாவணி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக வெளியான அறிவிப்பை அடுத்து ஏப்ரல் மாதத்திலிருந்து பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சியிலிருந்து மேலெழுந்துள்ளது” – என்றார்.