இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டால் தான் அரசில் தொடர்ந்து இருக்கப்போவதில்லையென பெற்றோலிய அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பால் பௌத்த மதம் இந்நாட்டில் வகித்துவரும் இடத்துக்குப் பங்கம் எதுவும் ஏற்படுமா? என்று சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“புதிய அரசமைப்புத் திட்டத்தால் பௌத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்படுமென நாங்கள் எந்த இடத்திலும் கூறவில்லை. அவ்வாறு கூறப்போவதும் இல்லை. இந்த அரசின் அமைச்சர்களில் ஒருவன் என்றவகையில் இதை எனக்கு உறுதியாகக் கூறமுடியும். எனினும், ஒருசில அரசியல்வாதிகள் இந்த விடயத்தை திரிபுபடுத்தி குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். புதிய அரசமைப்புத் திட்டத்தால் பௌத்த மதம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுமென பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது பொய்ப்பிரசாரங்கள் முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்டவை. சிங்கள பௌத்தர்களை உசுப்பேத்திவிடுவதற்கான சதி. பௌத்த மதத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யும் நாங்கள் ஏனைய மதங்களுக்குரிய உரிமையையும், அந்தஸ்தையும் நிச்சயம் வழங்குவோம்.
இந்த நாடு சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் சொந்தம் என்பதே எங்களது ஆணித்தரமான கொள்கை. அதிலிருந்து ஒருபோதும் தவறமாட்டோம்” – என்று மேலும் தெரிவித்துள்ளார்.