அர்ஜுன் அலோசியஸின் அட்சயப்பாத்திர இரகசியத்தை போட்டுடைத்தார் கம்மன்பில
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனும், பிணை, முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளவருமான அர்ஜுன அலோசியஸின் மதுஉற்பத்தி நிறுவனத்தின் வருமானத்தைக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டு மக்களை மதுபோதையில் உறங்கவைத்துவிட்டு திரைமறைவான விடயங்களை ரணில் சாதித்துவருவதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“பிணை முறிகள் அலோசியஸின் மென்டிஸ் நிறுவனத்தின் மதுவிற்பனை கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 2.9 மில்லியனிலிருந்து 9.7 மில்லியனாக 300 வீதத்தில் அதிகரித்துள்ளது. இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் என்ன? அரசாங்கத்தின் மதுசார்ந்த வரிக்கொள்கையும், சிறிய போத்தலிலான மதுபான பரவல். இந்தப் போத்தலில் கிரிக்கெட் பந்தின் உருவம் மட்டுமல்ல.
இருபதுக்கு இருபது என்றும் எழுதப்பட்டுள்ளது. அலோசியஸின் நடத்தையை நாங்கள் வரவேற்கின்றோம். சிறிய மதுபானக் குப்பிகளின் ஊடாக மதுபாவனையை அதிகரிக்கின்றனர். இதில் இரண்டு நோக்கங்கள் காணப்படுகின்றன. குறுகிய மற்றும் நீண்டகால பிரதிபலன் அரசாங்கத்திற்கு உள்ளது. இந்த மதுபோதையை அரிந்திய பின்னர் மயக்கமற்ற நிலையில் மக்கள் இருந்தால் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு முடியும். மேலும் இந்தப் போத்தலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக நிறுவனத்தின் செயற்பாட்டையும் அறிந்துகொள்ள முடியுமெனவும் கூறப்பட்டுள்ளது.
அலோசியஸின் மதுவிற்பனையை அரசாங்கம் ஊக்குவிப்பதன் நோக்கம், 2020ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிதியத்திற்காகும். கௌரவ ஜனாதிபதிக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம். அரசாங்கம் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகிற சந்தர்ப்பத்தில் மறுபுறம் அரசின் செயற்பாடு முற்றுப்புள்ளிக்கு மது என்பதாகும்” என்றார்.




