இயற்கையை நாம் அழித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்
இயற்கையை நாம் அழிவுறச் செய்தால் அதன் விளைவால் ஏற்படும் அழிவையும் நாமே எதிர்க்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான இலங்கை எனும் தொனிப்பொருளின் கீழ், மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன்கோயில் வீதியில் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் 12.5 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இயற்கை நீரோடும் வழிகள், கால்வாய்கள், நீரேந்துப் பகுதிகள் என்பனவற்றைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். ஆனால், இந்த இயற்கை நீர்புகும் மற்றும் வெளிச்செல்லும் வழிகள் தடுக்கப்பட்டு அல்லது அந்த பிரதேசங்கள் சிலரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் நாம் இயற்கை இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இயற்கையைப் பாதுகாப்பது அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் கடமை மாத்திரமல்ல. எங்களால் முடிந்தளவு இயற்கையை பாதுகாக்குமாறுதான் நாம் அலுவலர்களுக்கும் பொதுக்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.
இந்தக் கடமையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாம் அநேக பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பதை மறக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மியன்வல, மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

