ரணிலின் கார்களின் பெறுமதி 6000 இலட்சங்கள்: மைத்திரியின் கூட்டத்திற்கான செலவு 96 இலட்சம்
கல்வியை விரிவுபடுத்துவதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாக அரசாங்கம் கூறும் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று சைட்டம் கல்வி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி ஜே.வி.பி ஆரப்பாட்டப் பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தது. பேரணியின் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “இலவசக் கல்வியை காப்பாற்றுவதற்காகவே பொது மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். சைட்டம் முதலாளி, லக்ஸ்மன் கிரியெல்ல, எஸ்.பி.திஸாநாயக்க, மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை வழங்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். அது பொய் அது நடைபெறப்போவது இல்லை.
போலியான சான்றிதழ் வழங்கும் சைட்டம் கல்வி நிறுவனத்தை மூடுவதே இதற்கு ஒரே தீர்வு. சைட்டம் முதலாளிக்கும், அமைச்சர்களுக்கும் நியாயமான தீர்வினை வழங்கும் இந்த முடிவில் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்கப்போவது இல்லை. இது தொடர்பில் நாடாளுமன்றில், வீதியில் குரல் எழுப்பியுள்ளோம்.
எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றில் முழு நாள் விவாதம் நடத்த கோரிககை விடுத்துள்ளோம். கல்விச் சேவையை நடத்திச் செல்ல நிதியில்லை என்பதால் பணபலமிக்க முதலாளிகளுக்கு கல்விக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்ஜுன மகேந்திரன் பொது மக்களின் பணத்தை கொள்ளையடித்த பிணை முறி கொடுக்கல் வாங்களில் ஸ்ரீலங்காவில் ஐந்து வைத்திய பீடங்களை ஆரம்பிக்க முடியும்.
விவசாய அமைச்சிற்கு 220 இலட்ச ரூபா வாடகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடம் கடந்த 8 மாதங்களாக எவ்வித பாவனையும் இன்றி போடப்பட்டுள்ளது. எனினும் கல்வியை விரிவுபடுத்து நிதி போதவில்லை என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்வின் இரண்டு கார்களின் பெறுமதி மாத்திரம் 6000 இலட்சங்கள். அமைச்சர்களுக்கு வாகன கொள்வனவிற்காக 118 கோடி ரூபா கடந்த வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் வீடுகளை பராமரிக்க மாத்திரம் பல கோடி ரூபா செலவு செய்யப்படுகின்றது. பதுளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாத்திரம் 96 இலட்ச ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு நிதிப்பிரச்சினை அல்ல தமக்கு சார்பானவர்களுக்காக செயற்படுவதாலேயே பிரச்சினை ஏற்படுகின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.




