கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் உ.ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும், கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் காணாமல்போனோர்கள் நடத்திவரும் போராட்ட கொட்டகைக்கு நேற்றுக் காலை சென்ற அவர் அங்கு காணமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, ‘முந்நூறு நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமற் போனவர்களின் விடயத்தில் இங்குள்ள அரசியல்தலைவர்களையோ அரச அதிகாரிகளையோ நம்பி பலன் இல்லை என்றும் இனி உலக நாடுகளைத் தான் நம்பி இருக்கின்றோம்’ என காணாமல் போனவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களின் போராட்ட கொட்டகைக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மக்கள், தங்கள் ஆதங்கங்களை தெரிவித்தனர். ‘இதுவரை எந்த அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ எங்களை வந்து பார்க்கவில்லை. எங்களின் 38 குடும்பங்களின் 111 ஏக்கர் காணியைத் தான் விடுவித்துள்ளார்கள் ஏனைய 100 குடும்பங்களின் காணிகளிலும் தற்போதும் புதிதாக கட்டடங்களை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி விடு விக்கப்படாத காணிகளையும் விடுவிக்க உலக நாடுகள்தான் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உண்மையில் இது உலகத்தின் கவனத்துக்கு திருப்பவேண்டும். காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்று அவரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதன்பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இன்னும் விடுவிக்கப்படாமல் படையினரின் முகாம்கள் அமைந்துள்ள பகுதியில் பாடசாலை கட்டடங்களையும் பார்வையிட்டுள்ளார்.அதன்போது, ‘நான் இங்கு வந்து பார்வையிட்டு மக்களின் பிரச்சினையை கனேடிய நாடாளுமன்றிலும் ஐ.நா சபையிலும் குரல் கொடுத்து வருவேன்’ என்று ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.