இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டு முடிவில் நாட்டில் மொத்தமாக 2,688 பேருக்கு எயிட்ஸ் நோய் பீடித்திருக்கின்றது எனவும், அவர்களில் 81 பேர் சிறுவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் பால்வினை நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த 2,688 நோயாளிகளில் ஒருவர் மாத்திரம் மரணமடைந்துள்ளார். இலங்கையில் எயிட்ஸ் நோய் வெகுவாகக் குறைந்திருந்தபோதிலும் அது இப்போது படிப்படியாக அதிகரித்துவருகின்றது. மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவை வைத்துக்கொள்வதே இந்த நோய் பரவுவதற்கான பிரதான காரணம். இரத்ததானம் பெற்றவர்களில் நால்வருக்கு மாத்திரம் இந்த நோய் தொற்றியுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூலை இறுதி வாரத்தில் காலி மாவட்டத்தில் மாத்திரம் 42 ஆண்களும், 21 பெண்களும், 3 சிறுவர்களும் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் பால்வினை நோய்ப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.