ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த அனைத்து வன்முறைகளுக்கு ஸ்டாலின்தான் காரணம் என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான முறையில் தான் நடந்துகொண்டிருந்தது.
மாணவர்கள் யாருக்கும் தொந்தரவு செய்யவில்லை. யாருக்கும் தொல்லை கொடுக்காமல் அமைதியான அறப்போராட்டத்தை ஒழுக்கமாக ஒற்றுமையாக செய்து வந்தார்கள். இதில் அரசியல் புகுத்த நினைத்த ஸ்டாலின் செய்த தவறு தான் இவ்வளவு வன்முறைக்கும் வித்திட்டது.
மாணவர்களை தூண்டி அவர்களுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் திமுக. இயங்கியது. சில விஷமிகளை தி.மு.க. உள்ளே அனுப்பியது. அதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கிறது.
நடந்த வன்முறை சம்பவத்துக்கு இவர்கள் அடிப்படை. அதற்காக மாணவர்கள், பொதுமக்கள் என சம்பந்தமில்லாதவர்கள் இதில் தாக்கப்பட்டிருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். அதற்கு காரணமான அதிகாரிகள், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதப்படை பொலிசார், அவர்களுக்கு யாரையும் தெரியாது. அரசுக்கு மாணவர்களை தாக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
எல்லோரும் போராட்டத்தில்ல் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியதாக சொல்கிறார்கள். தி.மு.க.வும், சில அமைப்புகளும் தான் இதற்கு காரணம். பொலிசாராக இருந்தாலும், வன்முறையை தூண்டியவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




