வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு
வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த பேரணிக்கு அனைவரையும் பங்கேற்குமாறு வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.
25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல்கலைகழக கல்லூரிகள் பல்கலைகழகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா பல்கலைகழக கல்லூரியானது தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைகழக நிர்வாகத்தின்கீழ் வவனியா வளாகமாக இயங்கி வருகின்றது.
காலத்தின் தேவைகருதி வவுனியா வளாகமானது பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
வவுனியா மாவட்ட புத்திஜீவிகளுடன் இணைந்து வளாகத்தினை பல்கலைகழகமாக தரமுயர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
வன்னி பிரதேசமானது கடல்வளம், விவசாயம், இயற்கையானகாடுகள் மற்றும் பல்வகையான நீர் வளங்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றது.
இந்த பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்கு துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.
வன்னிப்பிரதேசத்திற்கென தனியான பாரம்பரியம், வரலாறுகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய நமது பிரதேசத்துக்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.
பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் வன்னிப்பிரதேசத்திற்கு பொருத்தமான புதிய பீடங்களையும் இங்கே ஆரம்பிக்கமுடியும்.
மூன்று இனங்கள் வாழுகின்ற இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைகழகமாக தரமுயர்த்த அரசாங்கத்தை வலியுறுத்தி நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு தனிப்பட்ட வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே எதிர்வரும் 28ம் திகதி காலை 10.00 மணிக்கு குருமண்காட்டில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின் பௌதீகவிஞ்ஞான பீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள பேரணியில் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.




