“20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை இன்னும் முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை. இந்தச் சட்டதிருத்தம் தொடர்பில் எமது கட்சி கூடி ஆராய்ந்தே ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை உள்ளடக்கிய 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபு வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டவரைபுக்கு பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தேசிய அரசின் பங்காளிக் கட்சியாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை எதிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என்று கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது,
“இதனை இன்னமும் முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை. நாம் இதனை ஆதரிப்பதா? இல்லையா? என்பதை கூடித் தீர்மானிப்போம். அதுவரையில் இதனைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது” – என்றார்.