Tuesday , June 10 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 20 ஆவது திருத்தம் அடியோடு மாற்றம்! – அரசுத் தலைமை முடிவு; உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

20 ஆவது திருத்தம் அடியோடு மாற்றம்! – அரசுத் தலைமை முடிவு; உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின் வடிவத்தை அடியோடு மாற்றுவதற்கு அரசு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தீர்மானித்தது. சகல மாகாண சபைகளையும் இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்து சரியாக ஒரு வருடத்தில் கலைக்கவும், அதன் பின்னர் ஒரே நாளில் சகல சபைகளுக்குமான தேர்தலை நடத்தவும் புதிய திருத்த வடிவம் வழி செய்கின்றது.

அதன் பின்னர் மாகாண சபை ஒன்று முற்கூட்டியே கலைக்கப்படும் சூழல் நேருமானால் அந்த மாகாண சபையின் எஞ்சிய ஆட்சிக் காலத்துக்கான நிர்வாகத்துக்கென ஓர் இடைக் காலத் தேர்தலை நடத்தி, சபையைத் தெரிவு செய்யவும் வழிவகுக்கும் விதத்தில் புதிய திருத்த வடிவம் அமைந்துள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார் எனவும் தெரியவந்தது

20ஆவது திருத்தம் தொடர்பில் அலரி மாளிகையில் இரண்டாவது தடவையாக நேற்றுமுன்தினம் மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுமந்திரன் எம்.பி., சட்டமா அதிபர், சட்டவரைஞர் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

கூட்டத்தின் முடிலில் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் வந்து சேர்ந்து கொண்டார்.

புதிய தீர்மானத்தின்படி- மாகாணசபைகள் கலைப்பு மற்றும் அதிகார விடயங்களில் நாடாளுமன்றத்தின் பங்களிப்பு முற்றாக விலக்கப்பட்டுள்ளது.

இருபதாவது சட்டத் திருத்தம் இரண்டு நோக்கங்களுக்காகவே கொண்டு வரப்படுகின்றது என்பது உயர் நீதிமன்றத்துக்கு இன்று தெளிவுபடுத்தப்படும்.

ஒன்று – ஏற்கனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட முறைமையே இனி, புதிய உத்தேச அரசமைப்புச் சட்டம் மூலம் நாடாளுமன்றத் தேர்தலிலும் பின்பற்றப்படவுள்ளது. அதாவது 60 வீத உறுப்பினர்களைத் தொகுதி வாரியாகவும், 40 வீத உறுப்பினர்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திலும் தெரிவு செய்யும் முறைமை. இந்த முறைமையை மாகாண சபைகளுக்கும் அறிமுகப்படுத்துதல்.

அடுத்தது – அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது.

முதலாவது விடயத்தை எட்டுவதற்கு மாகாண சபைப் பிரதேச எல்லைக்குள் தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்று புதிதாகச் செயலாற்ற வேண்டியிருக்கும். அந்தப் பணியை முடிப்பதற்கு ஒரு வருட காலம் தேவைப்படும்.

ஆகவே, அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து சரியாக ஒரு வருட காலத்தில் சகல மாகாண சபைகளும் தானாகவே கலைக்கப்பட்டவை ஆகும்.

ஒரு வருட கால முடிவில் அதனை நாடாளுமன்றம் செய்யத் தேவையில்லை. 20ஆவது சட்டத் திருத்தத்திலேயே அது இடம்பெற்றிருக்கும்.

அதன்படி – தற்போது பதவிக் காலத்தை முடிக்கும் வடமத்தி, சப்பிரகமுவ, கிழக்கு மாகாண சபைகளின் பதவிக் காலம் அதுவரை ஒரு வருட காலம் நீடிக்கப்படும்.

வடக்கு மாகாணம் உட்பட மூன்று மாகாண சபைகளின் காலம் ஏறத்தாழ அந்த ஒரு வருட காலத்தில் பூர்த்தியாகுமாதலால், அவற்றின் பதவிக் காலம் முடியும்போது அவை கலைக்கப்படுவதாக
அது அமையும்.

ஊவா உட்பட மற்றைய மூன்று சபைளும் தமது பதவிக் காலத்தில் தலா ஒரு வருடத்தை இழந்து முற்கூட்டியே அப்போது கலைக்கப்படும்.

அத்தகைய 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் மாகாண சபை ஒன்று தேர்தல் நடந்து சபை தெரிவான பின்னர் – அதன் பதவிக் காலம் முடியும் முன்னர் – அந்தச் சபை கலைக்கப்படும் நிலைமை வருமானால் – எஞ்சியிருக்கும் பதவிக் காலத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு நேற்றுமுன்தினம் செய்யப்பட்ட மாற்றம் தெரிவிக்கின்றது.

அத்தகைய சந்தர்ப்பத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேற்பட்ட பதவிக் காலம் எஞ்சியிருக்குமாயி ன் அந்தப் பதவிக்காலத்தை மட்டும் வகிப்பதற்கான மாகாண சபை ஒன்று இடைத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும்.

அப்படி ஒன்றரை வருடத்துக்குக் குறைந்த காலமே எஞ்சியிருக்கையி ல் ஓர் அவை கலைக்கப்படுமானால், அந்தக் காலத்தில் சம்பந்தப்பட்ட மாகாண சபை நேரடியாக ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படும். அந்த மாகாண ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் இருக்காது. ஏனைய விடயங்களில் அவருக்கு அதிகாரம் நீடிக்கும்.

இவ்வாறு நேற்றுமுன்தினம் பிரதமர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையில் சட்டத்துக்கு முரணான பிரகடனம் ஒன்றைச் செய்தமையினால் வரதராஜப்பெருமாள் தலைமையிலான வடக்கு – கிழக்கு மாகாண சபை விசேட சட்டமூலம் ஒன்று கொண்டு வரப்பட்டு அதன் மூலம் கலைக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் எந்த மாகாண சபையும் – அதன் முதலமைச்சரின் பரிந்துரையின்றி இதுவரை கலைக்கப்பவேயில்லை என்பதும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …