சிரியா சிறையில் 13 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் தூக்கிலிட்டு கொலை: அதிபர் ஆசாத் நடவடிக்கை
சிரியா சிறையில் கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் எதிர்ப்பாளர்களை அதிபர் ஆசாத் அரசாங்கம் தூக்கிலிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போராடி வருகிறார்கள்.
அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அரசை எதிர்ப்பவர்களை அதிபர் ஆசாத் அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது.
பின்னர் அவர்கள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுகின்றனர். சாத்னயா என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு அடைக்கப்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தூக்கிலிட்டு கொல்லப்படுகின்றனர்.
தூக்கிலிடப்படுபவர்களின் உடல்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு டமாஸ்கசில் உள்ள டிஸ்ரீன் ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு மொத்தமாக ஒரே இடத்தில் மண்ணில் போட்டு புதைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை அதாவது 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். வாரத்துக்கு 20 முதல் 50 பேர் வரை தூக்கில் ஏற்றப்பட்டுள்ளனர். இத்தகவலை பொதுமன்னிப்பு பெற்று உயிர் பிழைத்த குற்றவாளிகள் தெரிவித்தனர்.




