கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன் தான் பிரத்தியேகமான பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வைக் காண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற்று ஹஜ் யாத்திரை சென்று தமது மார்க்கக் கடமையைப் பூர்த்தி செய்வதில் நிருவாக ரீதியிலான சில சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.
இதற்கமைவாகவே கிழக்கு முதலமைச்சர் ஆளுநருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.