வவுனியா இரட்டைப் பெரியகுள மயானத்திற்கு விசமிகளால் இன்று (செவ்வாய்க்கிழமை) தீ வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இரட்டைப் பெரியகுள மயானத்திற்கே இன்று மதியம் தீ வைக்கப்பட்டதில் மயானம் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில் இதனை அவதானித்த இரட்டைப் பெரியகுளப் பிரிவுப் பொலிஸார் வவுனியா நகரசபைத் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து உடன் விரைந்த நகரசபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மற்றும் இரட்டைப் பெரியகுளப் பொலிஸ் நிலையம் உட்பட ஏ9 வீதிக்கும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன் போது மயானத்தின் பெரும்பகுதி நாசமடைந்துள்ளதுடன், இடம்பெறவிருந்த பெரும் அனர்த்தமும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைப் பெரியகுளப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.