வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் குரங்குகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிா்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரை அண்மித்துள்ள கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளே குரங்குகளின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளன.
குறித்த பகுதிகளுக்கு நாளாந்தம் வந்து செல்லும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள காய்கள் மற்றும் பழங்கள் என்பவற்றை எடுத்துச் சென்று அயலில் அவற்றை வீசுவதுடன் சிலவற்றை தாம் உணவாகவும் உட்கொள்கின்றன.
மேற்படி பிரதேசத்தின் வீதிகளில் குரங்குகளின் செயற்பாடு காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளதுடன், தினமும் குரங்குகளுக்கு காவல் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி நகரப்பகுதியில் உள்ள குரங்குளை காடுகளுக்குள் விடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.