உடபுஸ்ஸல்லாவையில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து பொகவந்தலாவையை நோக்கிப் பயணித்த லொரி ஒன்று இன்று காலை 11 மணியளவில் நானுஒயா ரதல்ல குறுக்கு பாதையில் விபத்துக்கள்ளானதில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பாதை ஒரத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட 7 பேர் காயம் மடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி 5 பேருடன் லொரி ஒன்று பயணித்துள்ளது. லொரி காலை 11 மணியளவில் நானுஒயா குறுக்கு பாதையை அடைந்த வேளையில் திடீரென விபத்துக்குளாகியுள்ளது.
விபத்து நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பொழுதிலும் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய உடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏழு பேர் இதன்போது காயமடைந்துள்ளனர்.
நானுஒயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த தலைமையிலான பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண்தில் இருந்து சாமி சிலைகளை கொண்டுச்சென்ற லொரியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்திற்கான காரணம் தொடர்பாகவும் நானுஒயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.