Wednesday , June 11 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த முன்னதாகவே ஆட்சியை கலைத்தமைக்கான காரணம் இதுதான்: மட்டக்களப்பில் பிரதமர்

மஹிந்த முன்னதாகவே ஆட்சியை கலைத்தமைக்கான காரணம் இதுதான்: மட்டக்களப்பில் பிரதமர்

தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்த காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை முன்னரகவே கலைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் முதல் நிகழ்வாக இன்று ஏறாவூர் நகரத்தில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபைக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

இங்கு தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளை செய்து காட்டிய மாணவர்களுக்கு நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யுத்தம் நிறைவடைந்தாலும் கூட தேசிய இணக்கப்பாடு என்பது இன்னமும் இந்த நாட்டுக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுது சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நல்லிணக்க அரசை உருவாக்கியுள்ளோம்.

 

நாம் இப்பொழுது இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை ஒழிப்பதற்காக செயற்படுகின்றோம். கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் முதலமைச்சர் காட்டும் அக்கறையை நான் பாராட்டுகின்றேன்.

இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். அமைச்சர்களும் மூவினங்களிலும் உள்ளார்கள். இனவாதிகள் இதனைக் குழப்புவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள்.

பட்டதாரி நியமனங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக 1700 பட்டதாரிகளை நியமிக்க அனுமதி வழங்கியதன் அடிப்படையில் இப்பொழுது நியமனங்கள் இடம்பெறுகின்றன.

 

நாங்கள் அரசைப் பாரமெடுக்கும்போது தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்தது. அதிக வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை முன்னராகவே கலைத்தார்.

இப்பொழுது தேசிய வருமானம் முன்னேற்றம் கண்டு வருகின்றது. யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் எந்த வளர்ச்சியும் இருக்கவில்லை.

இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்ற நாம் திட்டங்களை வகுத்துள்ளோம்.

 

திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும், கடற்படை, மீன்பிடி பொருளாதார, வருமானம், சுற்றுலாத்துறைக்கு திருமலை துறைமுக அபிவிருத்தி உதவும். இந்தியாவும் ஜப்பானும் இந்த விடயத்திலே உதவவுள்ளன.

கிழக்கு மாகாண அபிவிருத்தியிலே மாகாண அரசோடு சேர்ந்து மத்திய அரசும் உதவுகிறது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி விரிவுபடுத்தப்படும். விமானத் தளமும் அபிவிருத்தி செய்யப்படும் இதன் மூலம் பல தொழில்வாய்ப்புக்கள் கிட்டும். விவசாயம், பண்ணை அபிவிருத்தி உட்கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படும்.

இந்த நிகழ்வுகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, உட்பட இன்னும் பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …