மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத்தரப்பினர் மீட்டுள்ளனர்.
அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிராம அலுவலகர் ஊடாக பாப்பாமோட்டை காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருட்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டன.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,பாப்பாமோட்டை கிராம அலுவலகர் ஆகியோர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் குறித்த வெடி பொருட்கள் கடந்த காலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட வெடி பொருட்களைச் செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கையில்,பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.