மக்களின் மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தினைப் பேச முடியாது என கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடா்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இன்னுமொரு இனத்தினை நசுக்கும் விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கும் மக்களால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. அதேவேளை ஒரு சிலரின் செயற்பாடுகளாலே மக்களிடையே நல்லிணக்கச் செயற்பாடுகள் குழப்பமடைகின்றன.
அவர்கள் தமது சுய இலாபத்திற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகள் மக்களைப் பாதிக்கின்றன. தமது கதிரைகளைப் பாதுகாப்பதற்காக மக்களிடையே தீய எண்ணப்பாடுகள் விதைக்கப்படும்போது நல்லிணக்கச் செயற்பாடுகள் குழப்பமடைகின்றன.
மக்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவது கடினமான விடயமல்ல. இந்த சுய அரசியல் இலாபத்திற்காகச் செயற்படுகின்றவர்களை அடையாளம் கண்டு ஓரங்கட்ட முடியுமானால் மக்களிடையே நல்லிணக்கம் தானாகவே ஏற்படும்” என முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.