ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வெற்றிகளை பெற்ற போதிலும் அடைய வேண்டிய இலக்கு இன்னும் இருப்பதாக பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊடகம், நீதித்துறை மற்றும் பொலிஸ் சேவை போன்றன சுயாதீன சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை மக்கள் உணரும் வகையில் குறைக்கப்பட்டன. ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் அது அந்தவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இரண்டு ஆண்டுகளில் குற்றம் செய்தவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தண்டனை பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் பொருளாதார அபிவிருத்திக்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய அரசின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு மூதேவி பிடித்த நாளாகப் பிரகடனப்படுத்தி மஹிந்த அணியான பொது எதிரணி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் கொழும்பு லிப்டன் சந்தியில் பிற்பகல் 3.00 மணியளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொது எதிரணி செய்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.