கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டமை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென, காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, தாக்குதலை மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, சிறைச்சாலைகள் அத்தியட்சகரிடம் காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட வேலாயுதம் வரதராஜன் என்ற குறித்த கைதி, மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி சுகயீனமுற்றதால் சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறு அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கடுமையாக தாக்கப்பட்டதாகவும், வைத்தியசாலையில் வைத்தும் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென குறித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.