யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழர்கள் கலாச்சார, மொழி, பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதாகவும் நில அபகரிப்பின் மூலம் தமிழ் இனத்தின் மீதான இன சுத்திகரிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
செஞ்சோலை படுகொலை நீதிகோரலும் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவ சங்க மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 70 வருடங்களாக எமது தமிழ் இனம் விடுதலைக்காக போராடிவருகின்ற நிலையில் பல்வேறு விதமான இனப்படுகொலைகளைச் சந்தித்து வந்துள்ளது என்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக வடக்கில் செஞ்சோலை, செம்மணி, கிழக்கில் திராய்க்கேணி, வந்தாறுமூலை, கொக்கட்டிச்சோலை என பல படுகொலைகள் திட்டமிட்டு எமது இனம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்டது என அவர் கூறினார்.
தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு சமஸ்டி தீர்வு என்றும் அதனை தான் தாங்களும் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் இன்று வெறுமனமே ஒன்றுமே இல்லாத தீர்வுத் திட்டத்தை சிங்கள ஆட்சியாளர்கள் வழங்க முற்படுகின்றனர் என தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.