கூட்டு எதிர்க்கட்சி எப்போது பொது வேட்பாளரை நிறுத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விஜேதாச ராஜபக்சவை பொது வேட்பாளராக நிறுத்த கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி விஜேதாச ராஜபக்சவுக்கு சார்பாக குரல் கொடுக்காது. தனது கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பான தீர்மானத்தை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிமையுள்ளது.
விஜேதாச ராஜபக்ச, பழிவாங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தினால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் விஜேதாச ராஜபக்ச அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மூடி மறைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.