அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா தெரிவித்தார்.
தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சித் தலைமையத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”தமிழ் மக்கள் அரசியல் விழிப்படையவேண்டும். எங்களுடைய மாகாணங்களை நாங்களே ஆட்சி செய்து கொண்டு வருகின்ற மத்திய அரசாங்கத்தில் பலமான அமைச்சர்களை உருவாக்கவேண்டும்.
அப்பொழுது தான் மாகாண சபைக்கான அதிகாரங்களை நிறைவேற்றமுடியும். எமது கட்சிக்கு சிங்கள மக்களினதும், சிங்கள மதத் தலைவர்களினதும் ஆதரவு வெளிப்படையாக உள்ளது. அந்த சக்தியைக் கொண்டு நல்ல ஒரு தலைவருக்கு கீழ் வட.கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள மக்களும் சிங்கள மதத் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.
அப்பொழுதுதான் வட.கிழக்கில் தமிழர்களினது பிரதிநிதித்துவம் முதன்மையாக இருக்கும்” என கருணா மேலும் தெரிவித்தார்.