“அரசியல், பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் அரசு ஆட்டங்கண்டுள்ளதால் விரைவில் ஆட்சிமாற்றமொன்று ஏற்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே தென்படுகின்றது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாரிய நிதிமோசடி குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறுபிள்ளைபோல் செயற்படும் அரசு, நாட்டில் எந்தவொரு தரப்புக் கூறுவதையும் கேட்பதாகத் தெரியவில்லை. தவறான முகாமைத்துவத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஜனநாயக வழியிலான போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. இதனால், அரசு மீது அதிருப்தியில் இருக்கும் மக்கள் ஆட்சிமாற்றமொன்றை விரும்புகின்றனர். அதற்கான காலம் விரைவில் உதயமாகும்.
ஆட்சியை மாற்றுவதற்கு தேர்தல்வரை காத்திருக்கவேண்டியதில்லை. ஆளுந்தரப்பிலுள்ள சிலர் மஹிந்த அணியான பொது எதிரணியுடன் பேச்சு நடத்திவருகின்றனர். அவர்கள் இந்தப் பக்கம் வந்தாலேயே மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம். நாடாளுமன்ற நடைமுறை தெரிந்தவர்களுக்கு அது எப்படி நடக்கும் என்பது தெளிவாகப் புரியும். சில விடயங்களை இரகசியமாக வைத்துள்ளோம். காலம்வரும்போது அவை என்னவென்று தெரியவரும்” – என்றார்.