ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளராகிய தான் அக்கட்சியின் ஊடாகவே மீள் அரசியல் பிரவேசத்தை விரும்புகிறார் என்றும், தேசிய தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரே அது சாத்தியமாகும் என்றும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
36 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த மண்கவ்வியதால் திஸ்ஸவின் அரசியல் பயணமும் அஸ்தமனமாகியது. அதன்பின்னர் மஹிந்தவுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. பொது எதிரணியின் கூட்டங்களையும், அரசியல் சந்திப்புகளையும் புறக்கணித்தே வந்தார்.
ஐ.தே.கவில் மீண்டும் இணைவதற்காகவே அவர் இந்த யுக்தியைக் கையாண்டுவந்தார். எனினும், அவர் ஐ.தே.கவில் மீண்டும் இணைவதை அக்கட்சியின் கண்டி மாவட்ட எம்.பிக்கள் சிலர் விரும்பவில்லை. கட்சித் தலைமையும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 10ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது. இதன்போது திஸ்ஸ அத்தநாயக்க ஐ.தே.கவில் இணைவார் எனத் தகவல் வெளியாகிருந்தது.
அத்துடன், திஸ்ஸவுக்கு கட்சியின் இடமளிப்பதா அல்லது இல்லையா என அன்றைய தினமே முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. எனவே, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஐ.தே.க. கதவு திறக்குமா அல்லது கதவடைப்பு செய்யுமா என 11ஆம் திகதிக்கு பிறகே அறியக்கூடியதாக இருக்கின்றது.
இது பற்றி வினவியபோது கருத்து வெளியிட்ட திஸ்ஸ அத்தநாயக்க,
“கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எனக்கு அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை. தேசிய தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரே எனது மீள் அரசியல் பயணம் ஆரம்பமாகும். நான் ஒரு தீவிர ஐ.தே.க. ஆதரவாளர். எனவே, அக்கட்சியின் ஊடாகவே பயணத்தைத் தொடர விரும்புகின்றேன். இருந்தபோதிலும் கட்சியின் தற்போதைய பயணம் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றது. எப்படியும் அப்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும்” – என்றார்.