வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை இந்த ஆண்டு, சுழற்சி முறையில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது.
புளொட் அமைப்பு தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் இந்த விவகாரத்தில் ஒருமித்த நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ஏற்படவில்லை என்று தெரியவருகின்றது.
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது. 28 ஆசனங்களுடன், இரண்டு நியமன ஆசனங்களும் கிடைத்திருந்தன. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக, ஓர் நியமன ஆசனம் அந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.
முதலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த திருமதி மேரி கமலா குணசீலனுக்கு வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த எம்.பி.நடராஜாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது, ரெலோ சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த எஸ்.மயூரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் அடுத்த ஆசனம் தமது கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்று புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. கோரியுள்இளார். இது தொடர்பில் அவர் கோரிக்கை விடுத்த ஊடக செய்திக் குறிப்பில், “அ.அஸ்மின் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரையிலும் ஒரு தமிழரசுக்கட்சி அங்கத்தவராகவே இருந்து வருகின்றார்” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் இறுதியாண்டுக்கான ஆசனம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட வி.எஸ்.சிவகரனுக்கே வழங்கப்பட வேண்டும் என்று, 2013ஆம் ஆண்டு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்ததாகவும், தற்போது வி.எஸ்.சிவகரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும், அந்த ஆசனம் தமது கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.