மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 32 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களிலிருந்து மீள முன்னர், கடந்த 13ஆம் தேதி திங்கட்கிழமை வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின
குருநாகல், சிலாபம், குளியாப்பிட்டிய, கம்பஹா, மினுவாங்கொட உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டன.
குறிப்பாக, மினுவாங்கொடயில் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த சம்பவங்களுடன் தொடர்படையோர் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களில் 32 பேர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.