நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவுள்ள நிலையில், புதிய நீதி அமைச்சராக எவரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை நடத்திவருகின்றனர் என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
புதிய நீதி அமைச்சர் பதவிக்கு முக்கிய இரண்டு அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவின் பெயர் சிபாரிசு பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது.
தேசிய அரசின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளை வகித்துவரும் விஜயதாஸ ராஜபக்ஷவிடமிருந்து நீதி அமைச்சைப் பறிக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரிடம் கடந்தவாரம் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போதும் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், விஜயதாஸ குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று முக்கிய தீர்மானமொன்று எடுக்கவுள்ள நிலையிலேயே அவர் பதவி விலகும் அறிவிப்பை விடுக்கவுள்ளார். இதற்காக கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இன்று விசேட அறிவிப்பு விடுக்காவிட்டால், நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்துவிட்டு அவர் பதவி துறப்பார் எனவும் தெரியவருகின்றது.
நீதி அமைச்சருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாலேயே அவர் தாமாகவே பதவி விலகுகிறார் என்றும், புத்தசாசன அமைச்சுப் பதவி அவரிடம் தொடர்ந்தும் இருக்குமெனவும் ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கிய அரசின் கொள்கையை விஜயதாஸ ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்து அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளார் என்றும், அவரின் அமைச்சின்கீழ் செயற்படும் சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த அரசின் ஊழல், மோடிசகள் குறித்த வழக்கு விசாரணையின்போது மந்தகதியில் செயற்படுகின்றது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய விஜயதாஸ ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற ஜயம்பதி விக்கிரமரத்ன சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராவார். அரசமைப்புத்துறையிலும் அவர் நிபுணத்துவம்பெற்றுள்ளார். அரசமைப்பு வழிநடத்தும் குழுவிலும் அங்கத்தவராக இருக்கின்றார்.
அதேவேளை, அரசுமீது அதிருப்தியில் இருக்கும் விஜயதாஸ ராஜபக்ஷவை தம்பக்கம் வளைத்துப்போடுவதற்கு மஹிந்த அணி முயற்சிக்கின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், முக்கிய தேர்தலின்போது அவர் அரசிலிருந்து வெளியேறினால் அது அரசுக்கு நெருக்கடியாகவும், எதிரணிக்கு சாதகமாகவும் அமையுமென்பதால் காலப்போக்கில் விஜயதாஸவை கழற்றிவிடும் திட்டமும் எதிரணியிடம் இருக்கின்றது.