மதுபோதையில்- இரும்பு கம்பிகளுடன் வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பேரைக் கொண்ட இளைஞர் குழு ,வீட்டின் வாயிலை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டின் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சம்பவம் வவுனியா சாந்தசோலைப் பகுதியில் நேற்று நடந்துள்ளது.
தாக்குதலில் குடும்பத்தலைவர் மற்றும் கர்ப்பவதியாக அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் செய்வதறியாது தவித்ததுடன், வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே இருந்துள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பொலிஸார் வருவதற்கு முன்னரே குறித்த இளைஞர்கள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகக் குறித்த சம்பவம் இடம்பெற்றது எனறு வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.