இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் விஜயமாக கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார்.
இந்த விஜயத்தின்போது அவர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அவரது அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போதே இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஐ.நாவின் தலையீடுகள் குறித்து விஜயதாஸ ராஜபக்ஷ கடுமையான எதிர்ப்பை வெளியிட்டபோது இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஐ.நாவுடன் ஒத்துழைக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பேன் என்று ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், விஜயதாஸ ராஜபக்ஷவை எச்சரித்துள்ளார்.
அதற்கு விஜயதாஸ ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை இருப்பதாக பதிலளித்துள்ளார்.
இலங்கையில் ஐ.நா. நியாயமற்றமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் செயற்படுகின்றது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் எமர்சன் ஐ.நாவுக்கு அறிக்கையிட்டுள்ளார்.
நீதி அமைச்சில் நடந்த இந்த வாக்குவாதங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.