“அகதிகளாக வந்தவர்களை நாம் கைவிடக்கூடாது: அது இலங்கையின் கலாசாரமும் அல்ல. எனவே, சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காது அந்த மக்களை அரசு பாதுகாக்கவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றிவளைத்த குழுவொன்று அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டதுடன், அடாவடிச் செயலிலும் ஈடுபட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வினவியபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
“அகதிகளாக வந்த எவரையும் நாட்டை விட்டு விரட்டக்கூடாது. அதற்கு எதிராகச் செயற்படுவது எமது கலாசாரமும் அல்ல. இந்த விவகாரம் (ரோஹிங்யா முஸ்லிம்கள்) தொடர்பில் அரசும், பொலிஸாரும் இதனைவிட பொறுப்புடன் செயற்படவேண்டும்.
அகதிகளுக்கான ஐ.நா. தூதுவர் அலுவலகம் ஊடாக அவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அகதியாக வந்தவர்கள் அவர்களின் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படும்வரை அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.
இந்நிலையில் அவர்களை அலைக்கழித்து துன்புறுத்துவது ஏற்புடையதல்ல. அகதி அந்தஸ்து வழங்கமுடியாவிட்டால் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அரசும், பொலிஸாரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.