ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த அக்கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால், மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ விரும்புவதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறான நிலை ஏற்பட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றிபெறும் வாய்ப்பு இல்லை என்றும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் தோல்வியடைவார் என பசில் ராஜபக்ஷ கருதுவதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.