ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த வாகனங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்து தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
அவற்றை மாலிக்கு அனுப்பிவைப்பதற்கு முன்னர், மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கையின்போது, புகைப்படம் எடுக்கப்பட்டு, அது குறித்து தவறான தகவல் பேஸ்புக்கின் ஊடாக பரப்பப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்கள் எங்கிருந்தும் கொண்டுவரப்படவில்லை.
இராணுவத்தினரிடமிருந்த ஒரு ரக வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களை நிராகரித்துள்ள அவர், அவற்றில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.