Saturday , June 28 2025
Home / முக்கிய செய்திகள் / செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு

செஞ்சோலைப் படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளால் முல்லைத்தீவு – வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட செஞ்சோலையில், கடந்த 2006 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரை ஜி.சீ.ஈ. உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு, துணுக்காய் மற் றும் கிளிநொச்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த 400 வரையான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஓகஸ்ட் 14ஆம் திகதி இலங்கை விமானப் படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 53 மாணவிகளும் 8 பணியாளர்களுமாக 61 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களுக்கான பிரதான நினைவேந்தல் நிகழ்வு நேற்று முல்லைத்தீவு – வள்ளிபுனத்தில் செஞ்சோலை அமைந்திருந்த வளாகத்தில் நடைபெற்றது.

வன்னி குரோஸ் நினைவேந்தல் அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்றுக் காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர் சங்கத் தலைவர் நீதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.

படுகொலை செய்யப்பட்ட இரு மாணவிகளின் தந்தையான கனகையா பொதுச்சுடரை ஏற்றினார். பின்னர் ஒவ்வொரு மாணவிகளினதும் பெற்றோர் ஒவ்வொருவராக அழைக்கப்பட அவர்கள் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து செஞ்சோலைக்கீதம் ஒலிக்கவிடப்பட்டது. அப்போது ஏனையவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அக வணக்கம் இடம்பெற்றது.

வன்னி குரோஸ் அமைப்பின் இணைப்பாளர் ரூபன் தொடக்கவுரை ஆற்றினார். பலியான மாணவிகள் சார்பாக தாயார் உதயகுமார் கெளசிகா நினைவுப் பகிர்வு வழங்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கமலேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.புவனேஸ்வரன், க.சிவநேசன், முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா, யோ.புரட்சி ஆகியோர் நினைவுரை ஆற்றினர்.

பின்னர், பலியான மாணவிகளுக்கு நினைவுத் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முதலாவது அடிக்கலை சம்பவத்தில் பலியான இரு பிள்ளைகளின் தந்தையார் கனகையா நாட்டினார். தொடர்ந்து ஏனைய மாணவிகளின் பெற்றோர் அடிக்கல் நாட்டினர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வன்னியில், செஞ்சோலை வளாகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.பல்கலையில்

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழகத்திலும் நேற்று மிகவும் உணர்வெழுச்சியுடன் செஞ்சோலைப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் துணைவேந்தர் பேராசிரியர் கே.விக்னேஸ்வரன் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ரவிகரனில்
அலுவலகத்தில்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தனது அலுவலகமான மக்கள் தொடர்பகத்தில் மேற்படி மாணவிகளுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார். இதில் அவரது ஆதரவாளர்கள் சிலரும் பங்குபற்றினர்.

மட்டக்களப்பில்

அதேபோன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செஞ்சோலை வளாகத்திலும், மட்டக்களப்பு கோப் சென்ரர் மண்டபத்திலும் மேற்படி மாணவிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தது.

புலம்பெயர்
தேசங்களில்

தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் தமிழகத்திலும் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv