வடக்கில் கைது, தேடுதல்களால் முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவக சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு எவ்வித துன்பமும் வராது என்றும் பெருமையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், குறித்த கல்லூரியில் சென்று தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு வயது தடையாக இருக்கின்றது.
இப்படிப் பல பிரச்சினைகள் இருக்கையில், கடந்தகால சம்பவமொன்றுக்காக வவுனியா மேல் நீதிமன்றத்தால் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் எவ்வித துன்பமுமின்றி சிறப்பாகவே வாழ்கின்றனர் என்றே சர்வதேச சமூகத்துக்கு காண்பிக்கப்படுகின்றது. ஆனால், நிம்மதியற்ற வாழ்வை அவர்கள் வாழ்கின்றனர். எதற்கெடுத்தாலும் முன்னாள் போராளிகள் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.
யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இலக்குவைக்கப்பட்ட சம்பவத்துக்கும், எம்.பியொருவருக்கு கொலை அச்சுறுத்தல் ஏற்பட்ட விடயத்துக்கும் முன்னாள் போராளிகளையே முடிச்சுப்போட்டனர். இதனால், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள போராளிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டுவருகின்றனர். போர்க்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த இராணுவத்தினர்தான் ஆவா குழுவை உருவாக்கினர். அந்தக் குழு கொழும்பு வந்துவிட்டது என்று பேசப்படுகின்றது. இராணுவத்தால் உருவாக்கப்பட்ட குழுவை ஏன் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.