Monday , June 23 2025
Home / முக்கிய செய்திகள் / மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக அல்ல 20ஆவது திருத்தம் என்கிறது அரசு!

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக அல்ல 20ஆவது திருத்தம் என்கிறது அரசு!

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கிலேயே 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை அரசு நிராகரித்தது.
“மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதே ’20’இன் நோக்கம். மாறாக ஒத்திவைப்புக்கான நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறித்தும், மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகள் தொடர்பாகவும் எழுப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டத்துடன் 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை. குறித்த தேர்தல்களை ஒரேநாளில் நடத்தவேண்டும் என்பதற்குரிய யோசனை முன்மொழியப்பட்டது. அதற்கு ஆதரவளிக்கப்பட்டது. மாறாக, தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி காட்டவில்லை. அதற்கு நாம் எதிர்ப்பு.
மாகாண சபைத் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்துவதால் பாரிய செலவு ஏற்படுகின்றது. ஒரு தேர்தலை நடத்துவதற்கு சுமார் 80 கோடி ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரச அதிகாரிகளுக்கும் பிரச்சினை ஏற்படும். ஆகவேதான், மாகாண சபைத் தேர்தல்களை ஒரேநாளில் நடத்தும் நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
20ஆவது திருத்தச் சட்டம் குறித்து மாகாண சபைகளின் கருத்துகள் கோரப்படும். உத்தேச வரைபு மாகாண சபைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் இணங்காத பட்சத்தில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றவேண்டும்.
இதற்கிடையில் நீதிமன்றத்திலும் குறித்த சட்டதிருத்தத்தை சவாலுக்குட்படுத்தலாம். நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்று தெரியாது. இப்படி பல வழிமுறைகளைக் கடந்தே அதை நிறைவேற்றுவதாக இருந்தால் செய்யவேண்டும்” – என்றார்.
அதேவேளை, “மாகாண சபைத் தேர்தல்களை மட்டுமல்ல, ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரேநாளில் நடத்துவது பற்றியும் அரசு பரிசீலித்து வருகின்றது” என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv