”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
துன்னாலை இளைஞன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்தால் சட்ட வரையறைக்குள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இளைஞனின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை பொலிஸாருக்கு கிடையாதென தெரிவித்துள்ள சுமந்திரன், இவ்விடயத்தில் பொலிஸார் தமது வரம்பை மீறிச் செயற்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதியான விசாரணை நடைபெறுமென தமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.