அதிபர் சிறிசேனா பாராளுமன்றை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இதனால்,பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார்.
இருப்பினும், அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது.
இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
மேலும்,அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தங்களது கருத்துக்ளை வெளிபடுத்தி வருகின்றனர்.
அந்த வகையில்தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அதிபர் சிறிசேனா பாராளுமன்றை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.