முகநூல் சேவைகளும், அலைபேசிகளினூடான இணைய சேவைகளும் நண்பகலுக்குப் பின்னர் முழு அளவில் முடங்கின.
கண்டி மாவட்டத்தில் தொலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு காலை முதல் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், முகநூல் சேவைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன.
மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகங்கள், குழுக்களுக்கிடையில் கலவரத்துக்குத் தூபமிடும் வகையில் முகநூல்களினூடாகவும் இன்னபிற அலைபேசியூடான இணைய சேவைகளூடாகவும் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் இத்தகைய தடை கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகவாழ்வையும் இன ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் இத்தகைய முகநூல் மற்றும் அலைபேசியூடான இணைய சேவைகளை முடக்குவது சிறந்தது என்ற போதிலும் அரசு அத்துடன் நின்றுவிடாது வதந்திகள் பரப்புவோருக்கு எதிராகவும் கலவரத்தைத் தூண்டுவோருக்கு எதிராகவும் சட்டம், ஒழுங்கின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.