பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை – இவ்வாறு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புpரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று அல்லது நாளை பொது எதிரணி சபாநாயகரிடம் சமர்ப்பிக்குமென கூறியுள்ளது. என்றாலும், பிரேரணைக்கு ஆதரவாக அரச தரப்பில் இருந்து ஒரே ஒருவர் மாத்திரமே இதுவரை கையொப்பமிட்டுள்ளதுடன், எதிரணியிலேயே இன்னமும் பலர் கையொப்பமிடவில்லை. இராஜாங்க அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்டுள்ளதுடன், அமைச்சர் சுசில் பிரேரமஜயந்தவும் ஆதரவாக கையளிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
என்றாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் சு.கவில் இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் துமிந்த திஸ்ஸாநாயக்க மேலும் கூறியதாவது,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பத தொடர்பில் சு.கவில் பொது இணக்கப்பாடொன்று இதுவரை எட்டப்படவில்லை. எனது தனிப்பட்ட கருத்தின் பிரகாரம் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடுகிறேன் என்றார்.