சோமாலியாவில் கடுமையான வறட்சி – 2 நாட்களில் 110 பேர் பரிதாப சாவு
கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன.
இந்த வறட்சியானது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என சோமாலியாவிற்கான ஐ.நா. மனிதாபிமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் டி கிளர்க் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து அதிபர் முகமது அப்துல்லாகி பார்மஜோ அங்கு தேசிய பேரழிவு நிலையை பிரகடனப்படுத்தினார்.
இந்த நிலையில், அந்நாட்டின் தென்மேற்கு பிராந்திய பகுதியான பே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஞ்சம் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. உண்ண உணவு இன்றியும், குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் பே பிராந்தியத்திற்கு உட்பட கிராமபுற பகுதிகளில் பட்டினி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினை காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 110 பேர் பரிதாபமாக இறந்து உள்ளதாக பிரதமர் ஹசன் அலி கைரே தெரிவித்து உள்ளார். தலைநகர் மொகாதிசுவில் நடந்த வறட்சி குழு உடனான ஆலோசனைக்கு பின் பிரதமர் இந்த தகவலை தெரிவித்தார்.
தொழிலதிபர்கள் மற்றும் வசதிபடைத்த அனைவரும் வறட்சியை போக்கும் நடவடிக்கையில் பங்களிப்பாற்ற வேண்டும் எனவும் பசி பட்டினியால் இறந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான சோமாலியர்களை காப்பாற்ற உதவவேண்டும் எனவும் பிரதமர் ஹசன் அலி கைரே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.




