சசிகலா சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவில் அவர் சொத்துக்களை கணக்கிட்டதில் பிழை உள்ளது என்றே மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 18 ஆண்டுகளுக்கு முன், இப்போதைய, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா, 2014, செப்டம்பர் 27ல், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, தலா, நான்காண்டு சிறை தண்டனையும் விதித்தார்.மேலும், ஜெயலலிதாவுக்கு, நூறு கோடி ரூபாய் அபராதமும், பிறருக்கு, தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
சிறையில் அடைப்பு:
இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 17ல், அவரை ஜாமினில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார்.
அதே நேரம், தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையை, மே 12க்குள் முடிக்க, கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த, மே 11ல் பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரை, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக மீண் டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் 2015 ஆண்டு ஜூன், 22ம் தேதி மேல் முறையீடு செய்தது. வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், ‘ஜெயலலிதா மற்றும் மூவரை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.
கடன் விவர கூட்டலில் தவறு :
மேல் முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்களாவன:
* இந்த வழக்கில், கர்நாடகா விசாரணை அமைப்பு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன், வாதியாக சேர்க்கப்படவில்லை.
* ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை, உயர்நீதிமன்றம் தவறாக கணக்கிட்டுள்ளது.
* மொத்த கடன், 10.67 கோடி ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், 24.17 கோடி ரூபாய் என, தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.
* வருமானத்தை விட, 8.12 சதவீதம் அளவிற்கு தான் ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார் என கருதி, நீதிபதி குமாரசாமி அவரை விடுதலை செய்துள்ளார். ஆனால், 76.7 சதவீத அளவுக்கு, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார்.
* வருமானத்திற்கு அதிகமாக, 16.32 கோடி ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது; வருமானம், 21.26 கோடி ரூபாயாக நீதிபதியால் கண்டறியப்பட்டுள்ளது.
* ‘வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீதத்திற்குள் சொத்து சேர்த்திருந்தால், வழக்கிலிருந்து விடுதலை செய்யலாம்’ என, சுப்ரீம் கோர்ட் முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவை, இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு சாதகமாக ஆக்கியுள்ளது. ஆனால், அவர், 10 சதவீதம் அல்ல; 76 சதவீதம் அளவிற்கு சொத்து குவித்துள்ளார்.
* கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு இல்லை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை, கவனத்தில் கொள்ளவேண்டும்.
* முதல்வர் பதவியில் இருந்தபோது, பதவியை தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துகளை குவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை. அவரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, நீதித்துறையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும். இவ்வாறு, கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது கணக்குப்படி 168 சதவீதம்!
‘கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழையை சரி செய்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு, 168 சதவீதம் வரும்’ என, ‘அப்பீல்’ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை, விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 8.12 சதவீதம் என கணக்கிட்ட, நீதிபதி குமாரசாமி, ‘ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பார்த்தால், அது, அனுமதிக்கப்பட்ட அளவு தான்’ என, குறிப்பிட்டிருந்தார்.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.,), கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழை இருப்பதாக, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனுவில், கூறியிருப்பதாவது:உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள பிழையை சரிசெய்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 16.32 கோடி அளவுக்கு வருகிறது. அது, உயர் நீதிமன்றம் கணக்கிட்ட, 8.12 சதவீதத்துக்கு மாற்றாக, 76.70 சதவீதமாகத் தெரிகிறது. இதனுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொன்னது போல், கட்டடங்களின் கட்டுமான செலவான, 19.90 கோடி ரூபாயைச் சேர்த்தால், சொத்தின் அதீத மதிப்பு, 93.60 சதவீதமாகிறது.இத்தொகையுடன், ஜெயா பப்ளிகேஷன்ஸ் வருமானமான, 22.75 கோடி ரூபாயைச் சேர்த்தால், கூடுதல் வருமானம், 123.50 சதவீதமாகிறது; இதனுடன், சுதாகரனின் திருமண செலவான, 6.16 கோடி ரூபாயைச் சேர்த்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 168 சதவீதம் ஆகிறது. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு ஜூன், 6ம் தேதி விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக இருப்பதால் தமிழக அரசியல் மேலும் உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.




