அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.குறித்த நபர்கள் இன்று (புதன்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாகவும் அதன் விளைவுகள் குறித்தும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் எவ்வித விசாரணையுமின்றி பல்கலை நிர்வாகத்தால் இடைநிறுத்தப்பட்டமை, ஊழியர்கள் தினவரவுப் பதிவேடுகளை பயன்படுத்த முடியாதவாறு பதிவாளர் தடுத்து வைத்துள்ளமை போன்றவற்றால் நாளாந்த கடமைகளை ஆற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாக ஊழியர் சங்கம் சாடியுள்ளது.
அத்தோடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்தினை திரிபுபடுத்தி தவறான உள்ளக சுற்று நிருபத்தினை வெளியிட்டு அதனை அமுல்படுத்த ஊழியர்களை வற்புறுத்துவதோடு, பீடாதிபதிகள், நிர்வாகிகள் ஊழியரை தனியே அழைத்து நிர்வாக முறைகளை மீறி அச்சுறுத்தி வருவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.எனவே இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயவே குறித்த குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.