“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில், இராணுவத்தினரின் வசமுள்ள கடற்கரையோரம் உட்பட்ட சுமார் 25 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு, முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்துவதோடு, இவ்விடயம் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளேன்.
– இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.
“யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில், மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்த முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப் பகுதி உட்பட25 ஏக்கர் நிலம் இராணுவத்தினர் வசமுள்ளது. இதனை விடுவித்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நிலங்களை பரவலாக கையகப்படுத்துகிற மிக மோசமான செயற்பாட்டில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இப்பகுதி நிலங்களும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதனை முதலமைச்சருடைய கவனத்துக்கு விரைவில் கொண்டுவருவதோடு, அடுத்து வரவிருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கலந்துரையாடுவேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.