“முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தில்லுமுல்லுகள் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமாகியிருப்பதால் அவரும் அவருக்குத் துணைநின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.”
– இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியான பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ், ரவி கருணாநாயக்கவுக்கு தனது நன்றிக்கடனாக இரண்டு அதிசொகுசு வீடுகளுக்கான பெருந்தொகைக் குத்தகைப்பணத்தை செலுத்தியிருக்கிறார் எனவும், பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததுடன், இவ்வாறு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ரவி கருணாநாயக்கவும் அவரின் தில்லுமுல்லுகள் தெரிந்திருந்தும் கண்டும் காணாததுபோல் நடந்துகொண்ட பிரதமரும் தொடர்ந்தும் தங்களது பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் எனவும் நாமல் எம்.பி. சாடியுள்ளார்.
ரவியின் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டிருந்தால் இந்நேரம் அவர்கள் தயவுதாட்சண்யமின்றி சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள் எனவும், ரவிக்கு ஒரு நீதி, ராஜபக்ஷவுக்கு ஒரு நீதி என்ற தாற்பரியத்தை அரசு கைவிட்டுவிட்டு குற்றவாளிகளுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.